புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில் தற்போது பெர்த்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா சார்பிலான மேன்முறையீடொன்றை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
பிரியா, நடேஸ் மற்றும் இவர்களது மூத்த மகள் கோபிகா ஆகியோரது விசா விண்ணப்பங்கள் மற்றும் மேற்முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், நான்கு வயதுச் சிறுமி தருணிகாவின் அகதிதஞ்ச விண்ணப்பத்திற்கு procedural fairness-பிரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை காண்பிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது.
மேலும் தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
இது பிரியா குடும்பத்திற்கு சாதகமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டதுடன், தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பினைத் திறந்திருந்தது.

Tharunicaa and Kopika Murugappan Source: SBS News
மறுபுறத்தில் பிரியாவும் நடேசும் படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்ததால் அவர்களுக்குப் பிறந்த தருணிகாவும் சட்டவிரோத குடியேறியாகவே பார்க்கப்படுவதாகவும், அவர் சார்பில் 2019ம் ஆண்டு தாக்கல்செய்யப்பட்ட பாதுகாப்பு விண்ணப்பம் செல்லுபடியற்றது(குடிவரவு அமைச்சர் விதிவிலக்கு அளிக்காதபட்சத்தில்) எனவும் பெடரல் நீதிமன்றம் மற்றுமொரு தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து குறித்த தீர்ப்பிற்கெதிராக உயர்நீதிமன்றம் செல்லவேண்டுமெனில் சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்தநிலையில், தருணிகாவின் சட்டத்தரணி இதற்கான அனுமதியைக் கோரியிருந்தார்.
ஆனால் இந்தக்கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிமன்றின் இந்தமுடிவு ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், உள்துறை அமைச்சர் இவ்விவகாரத்தில் தலையிட்டு இக்குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்கமுடியுமெனவும் இதற்காக தாம் தொடர்ந்து போராடப்போவதாகவும் பிரியா-நடேஸ் குடும்பத்தின் விடுதலைக்காக போராடிவரும் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் குடிவரவு அமைச்சர் Alex Hawke-இடம் கேட்டபோது, இக்குடும்பம் தொடர்பிலான வேறுபல சட்டமுன்னெடுப்புகள் தொடர்வதால் தற்போது எதுவும்கூறமுடியாது என மறுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவரும் பிரியா-நடேஸ் குடும்பம், சிறுமி தருணிகாவின் மருத்துவசிகிச்சைகளுக்காக கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக பெர்த்தில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு அமைச்சர் Alex Hawke தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இக்குடும்பம் தற்போதைக்கு தடுப்புமுகாமைவிட்டு வெளியே வாழ்வதற்கு அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The Murugappan family - father Nades, mother Priya, and daughters Kopika and Tharnicaa - in a photo shared by supporters. Source: AAP Images
பிரியா- நடேஸ் குடும்பத்தின் பின்னணி
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.
நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் 2018 ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.
2018 மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

An earlier photo of the detained Tamil family from Biloela. Source: Supplied
இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 ஜுன் 21 அன்று மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.
ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை 2018 டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.
இப்படியாக சுமார் ஒன்றரை வருடங்களாக இக்குடும்பம் மெல்பனிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.

Supporters of the Tamil family outside the High Court ahead of the decision. Source: SBS News
இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.