நாட்டில் நிலவி வரும் வீட்டு நெருக்கடியைத் தணிக்கும் முயற்சியாக 2024 முதல் ஐந்து ஆண்டுகளில் வீட்டு வசதியை அதிகரிப்பதற்கான திட்டம் இன்றைய நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு புதிய தேசிய வீட்டு ஒப்பந்தத்தின் கீழ் பெடரல் அரசு மாநிலங்கள், பிராந்தியங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கட்டுமான துறையை இணைக்கவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் ஐந்து ஆண்டுகளில் சுமார் ஒரு மில்லியன் புதிய வீடுகள் கட்டப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பெடரல் அரசு கூடுதலாக 10,000 மலிவு விலை குடியிருப்புகளை கட்டுவதற்கு ஆதரவு வழங்கவுள்ளது அதெற்கென $350 மில்லியன் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் குறைந்த மற்றும் மிதமான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அதே எண்ணிக்கையிலான வீடுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய தேசிய வீட்டு ஒப்பந்த திட்டத்துடன் நீண்ட கால சீர்திருத்தங்களுக்கு அரசு ஒரு தேசிய வீட்டுவசதி மற்றும் வீடற்றோர் திட்டம் ஒன்றை உருவாக்கவுள்ளது.
தகுதி பெரும் 10,000 முதல் வீடு வாங்குபவர்களுக்கு பிராந்திய ஆஸ்திரேலியாவில் வீடு வாங்க ஓராண்டிற்கு பெடரல் அரசு வீட்டு விலையில் 15 சதவீதம் உத்தரவாதம் அளித்து உதவவுள்ளது.
Defence Home Ownership Assistance திட்டத்தை விரிவுபடுத்த 46.2 மில்லியன் ஒதுக்கீடு. இதன் மூலம் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் வீடு வாங்குவதற்கு அவர்களின் வீட்டுக்கடன் வட்டிதொகையில் மாதாந்திர மானியம் வழங்கப்படும்.
——————————————————————————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.