ஒரே மாதத்தில் 30 புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்!

ABF

Source: ABF Media

ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் வந்த 30 புகலிடக்கோரிக்கையாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் தமது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக Operation Sovereign Borders என்ற ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலான மாதாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 30 பேரில்- ஜனவரி மாதம் 1ம் திகதி 2014ம் ஆண்டுக்கு முன்னர் வந்த 22 பேர் திருப்பியனுப்பப்படுவதற்கு சம்மதித்திருந்ததாகவும்- ஏனைய 8 பேர் பலவந்தமாக அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 01 - 30 வரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் வாழ்ந்த எவரும் தமது சுயவிருப்பின் பேரில் தாய்நாட்டிற்கு திருப்பியனுப்பப்படவில்லை என்றும் இச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2017 நவம்பரில் இந்தோனேசியாவிலிருந்து 6 பங்களாதேஷ் புகலிடக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அழைத்துவரமுற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 3 பேருக்கு கடந்த மாதம் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட Arif, Mohammad Nur Hossain, Herry Firdaus ஆகிய மூவருக்கும் 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 1 பில்லியன் இந்தோனேசிய ரூபாய்கள் அபராதமும் (அல்லது அதற்குப் பதிலாக மேலுமொரு மாதகால சிறை) விதிக்கப்பட்டுள்ளது.




Share
Published 25 October 2018 1:49pm
Updated 25 October 2018 2:20pm
Presented by Renuka

Share this with family and friends