தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு புதிய பிரிவு விசா ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கென 4 லட்சம் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் புதிய entrepreneurs - தொழில்முனைவோரை வரவழைக்கும் நோக்கில் பரீட்சார்த்த முயற்சியாக இப்புதிய விசா அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள entrepreneurial and Business & Innovation விசாவிலிருந்து இது மாறுபட்டது என தெரிவிக்கப்படுகிறது.
இப்புதிய பரீட்சார்த்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் தமது வர்த்தக நடவடிக்கை குறித்த திட்டத்தையும் அது குறித்த விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு தெற்கு ஆஸ்திரேலியா வந்து வர்த்தக நடவடிக்கையை ஆரம்பிக்கவென தற்காலிக விசா முதலில் வழங்கப்படும். பின்னர் வெற்றிகரமாக தமது வர்த்தகத்தை கட்டியெழுப்புபவர்கள் இங்கு நிரந்தரமாக வாழ்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.
45 வயதுக்கு குறைந்தவர்கள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் தமது ஆங்கிலப் புலமையை நிரூபிப்பதற்கு IELTS பரீட்சையில் band 5 பெற்றிருக்க வேண்டும்.
4 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் இப்பரீட்சார்த்த முயற்சியின் கீழ் முதல்வருடத்தில் 30 விசாக்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.