லண்டன் தீ விபத்து: இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர்கள் பலி!

Fire

Source: Dailymail

லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தமிழர்கள் வீட்டில் ஏற்பட்ட தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

இந்தச் சம்பவம் தென் கிழக்கு லண்டனில் Bexleyheath பகுதியின் ஹமில்டன் வீதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிருபா மற்றும் அவரது நான்கு வயது மகன் தபிஷ், ஒரு வயது மகள் ஹஸ்னா, நிருபாவின் தாயார் ஆகியோரே இவ்வாறு உயிரழந்தவர்கள் ஆவர்.

வீட்டில் தீ ஏற்பட்டதையடுத்து பதறியடித்துக்கொண்டு தனது கணவன் யோகனுக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்த நிருபா "நெருப்பு நெருப்பு" - என்று கதறியுள்ளார். பேசிக்கொண்டிருக்கும்போதே நிருபாவின் முனையில் தொலைபேசி தொடர்பு அறுந்துவிட்டது. வேலையில் நின்றுகொண்டிருந்த யோகன் உடனடியாக வீட்டுக்கு ஓடிவந்தபோது, எரிந்து சாம்பலான வீட்டிற்குள்ளிருந்து மனைவி, பிள்ளைகள் மற்றும் மாமியாரது சடலங்களைத்தான் கண்டிருக்கிறார். சம்பவத்தில், அந்த வீட்டிலிருந்த நிருபாவின் மைத்துனர் ஜன்னல் வழியாகக் குதித்து உயிர்தப்பிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஜன்னல் வழியாக குதித்தில் இவருக்கு கால் முறிந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லண்டனில் கடந்த 15 வருடங்களாக வசித்துவரும் யோகன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் இந்தப்புதிய வீட்டை வாங்கிக்கொண்டு, தனது சகோதரிகளின் வீட்டுக்கு அருகில் குடிவந்திருந்தார் என்றும், சம்பவம் இடம்பெற்றபோது வீட்டிலிருந்த smoke alarm தொழிற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நிருபாவின் தாயார் இலங்கைக்கு திரும்பவிருந்த நிலையில், எல்லோரும் வீட்டின் மேல்மாடியில் பொருட்களை பொதிசெய்வதில் மும்முரமாக இருந்த வேளையில், வீட்டின் கீழ் தளத்தில் தீ உருவாகி, மிக வேகமாக முழுவீட்டையும் சூழ்ந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான தகவலறிந்த அவசர சேவைப்பிரிவினர், உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். ஆறு தீயணைப்பு வாகனங்களில் சென்ற நாற்பது வீரர்கள் தீயை அணைப்பதற்கு போராடினார்கள் என்றும், சுமார் ஒருமணி நேரம் 15 நிமிடங்களில் நெருப்பு நான்கு உயிர்களையும் காவுகொண்டுவிட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த தகவலின்படி, தீயணைப்பு படையினர், இரண்டு பிள்ளைகளையும் வீட்டின் மேல்மாடி ஜன்னல் வழியாக வெளியில் எடுத்திருக்கிறார்கள். நான்கு வயது தபேஷிற்கு செயற்கை சுவாசமளித்து கடைசிநேர முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதுவுமே பலனளிக்கவில்லை. பொலீஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

Readers seeking support can contact Lifeline for 24-7 crisis support on 13 11 14, and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25). More information is available at and . 


SBS தமிழ்ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.



Share
Published 20 November 2021 10:06am
Updated 20 November 2021 10:49am

Share this with family and friends