கடந்த திங்கட்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் Campbell Street, Parramatta அடுக்குமாடி குடியிருப்புத்தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தையடுத்து அவசரசேவைப்பிரிவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
குடியிருப்புத் தொகுதியின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருந்ததாகவும், இதற்குள் அகப்பட்ட 27 வயது இளைஞர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரோடு தங்கியிருந்த மற்றொருவர் சிறுகாயங்களுடன் உயிர்தப்பிவிட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த Raunak என்ற மாணவரே இவ்வாறு தீவிபத்தில் சிக்கி உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2019ம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்த Raunak, பல்கலைக்கழகத்தில் Masters in Networking கற்கைநெறியை மேற்கொண்டு வந்ததாகவும், தனது படிப்பை முடிக்கும்நிலையில் இருந்ததாகவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்விகற்ற சமகாலத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், இந்தியாவிலுள்ள பெற்றோருக்கும் சகோதரனுக்கும் நிதியுதவி வழங்கிவந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
படிப்பைமுடித்துவிட்டு ஒருசில மாதங்களில் இந்தியா சென்று, தனது குடும்பத்தைப் பார்வையிட Raunak திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது அவரது உடல் மாத்திரமே அங்கு செல்வதாகவும் நண்பர்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.
இதேவேளை Raunak-இன் உடலை இந்தியா அனுப்புவதற்கான செலவுகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்கென, Gofundme ஊடாக நிதிசேகரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இதுஇவ்வாறிருக்க தீவிபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணை நடைபெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect on1800 737 732. More information and support with mental health is available at and on 1300 22 4636.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.