ஆஸ்திரேலியாவில் Subclass 489 Skilled Regional (Provisional) விசாவிலுள்ளவர்களின் நிரந்தர குடியுரிமை விண்ணப்ப பரிசீலனை மிகத்தாமதமாக நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து தமது விண்ணப்ப பரிசீலனையை விரைவுபடுத்துமாறு கோரி, பலர் இணையவழி கையெழுத்து வேட்டை ஒன்றையும் நடத்துகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் regional பகுதிகளில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு அனுமதிக்கும் Subclass 489 Skilled Regional (Provisional) விசாவிலுள்ளவர்கள் Skilled Regional (Permanent) (subclass 887) விசா ஊடாக ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
Regional பகுதியில் இரண்டு வருடங்கள் வாழ்ந்திருக்க வேண்டும், அங்கே ஒரு வருடமாவது வேலை செய்திருக்க வேண்டும் போன்ற சில நிபந்தனைகளை Skilled Regional (Permanent) (subclass 887) விசா விண்ணப்பதாரிகள் பூர்த்திசெய்ய வேண்டும்.
இவ்வாறு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்த பலர், தமக்கான நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்துவிட்டு சுமார் 15 மாதங்களுக்கு மேல் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வேறு நிரந்தர வேலையை பெற்றுக்கொள்வதிலும், வீடு மனை வாங்குவது மற்றும் பிள்ளைகளின் கல்விக்கட்டணம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பலர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான பரிசீலனை நடைமுறை தாமதமாகியுள்ளதை உள்துறை அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.
Skilled Regional (Permanent) (subclass 887) விண்ணப்பதாரர்களுக்கான பரிசீலனைக் காலம் சமீபத்திய மாதங்களில் சிறிது அதிகரித்துள்ளதாகவும், ஜூலை 2021இல் இது 14 முதல் 17 மாதங்கள் வரை இருந்ததாகவும், நவம்பர் 2021இல் இது 18 முதல் 19 மாதங்கள் வரை அதிகரித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு நியாயமான காலக்கெடுவுக்குள் Skilled Regional (Permanent) (subclass 887) விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு உள்துறை அமைச்சு முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர வதிவிட உரிமை கோரி அதிகளவானோர் விண்ணப்பிப்பதாலும் கடுமையான பாதுகாப்பு விதிகளின் கீழ் இவை பரிசீலிக்கப்படுவதாலும் ஒருவர் நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கு காத்திருக்கும் காலம் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சு நியாயப்படுத்தியுள்ளது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.