ஆஸ்திரேலியாவில் புகலிடம் வழங்குமாறு 2 லட்சத்து 11 ஆயிரம் ஆப்கானியர்கள் விண்ணப்பம்

ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு வழங்குமாறுகோரி சுமார் 211,000 விண்ணப்பங்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

2022-08-10_13-33-33.jpg

Afghan evacuees arrive at Australia’s main operating base in the Middle East, on board a Royal Australian Air Force C-17A Globemaster, in August 2021. Credit: SUPPLIED/PR IMAGE

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பலர் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறுகோரி விண்ணப்பங்களைத் தாக்கல்செய்துவருகின்றனர்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 31,500 ஆப்கானியர்களை, மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியா உள்வாங்கும் என முன்னாள் லிபரல் கூட்டணி அரசு அறிவித்திருந்ததுடன், புதிதாக பொறுப்பேற்ற லேபர் அரசும் இதற்கு இணங்கியிருந்தது.

ஆனால் ஆப்கானிஸ்தானிலிருந்து தாக்கல்செய்யப்படும் விண்ணப்பங்கள் தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்வதாகவும், இதுவரை 211,000 விண்ணப்பங்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன.

மேற்குறிப்பிட்டுள்ள 211,000 விண்ணப்பங்களில் 57.4 வீதம் அதாவது 108,351 விண்ணப்பங்கள் மாத்திரமே குடிவரவுத்துறையின் கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், 42.6 வீதமான விண்ணப்பங்கள் இன்னமும் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
2022-08-10_13-32-12.jpg
A graphic shows the proportion of applications from Afghan nationals registered in the systems of the Department of Home Affairs. Credit: SBS News / Karin Zhou-Zheng
அதேநேரம் 15 ஆகஸ்ட் 2021 க்கும் 31 ஜுலை 2022 காலப்பகுதிக்கிடையில் 5,929 ஆப்கானியரது விண்ணப்பங்கள் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானிலிருந்த தாக்கல்செய்யப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருப்பதாகவும் அவற்றைப் பரிசீலிப்பதற்கான மிகப்பெரும் பொறுப்பு குடிவரவுத்துறைக்கு முன்பாக உள்ளதாகவும் SBS செய்திக்கு வழங்கிய நேர்காணலில் குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க ஆப்கானிஸ்தானில் தமது உறவினர்கள் உயிர் அச்சுறுத்தலுடன் வாழ்வதாகவும், ஆஸ்திரேலிய அரசு விசா விண்ணப்ப பரிசீலனைக்கு அதிக காலம் எடுத்துக்கொள்வதால் தாம் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இங்குள்ள பலர் தெரிவித்துள்ளனர்.
தமது உறவினர்களின் விண்ணப்பங்கள் குடிவரத்துறையிடம் கிடைத்துள்ளதா இல்லையா என்பதுகூட தெரியாதநிலையில் பலர் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் ஆப்கானியர்களது விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளபோதிலும், தேங்கிக்கிடக்கும் ஏனைய விண்ணப்பங்களையும் பரிசீலிக்கவேண்டியுள்ளதாக அமைச்சர் Andrew Giles சுட்டிக்காட்டியுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 10 August 2022 1:47pm
Updated 10 August 2022 1:52pm
Source: SBS

Share this with family and friends