தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் தொடர்பில் பாரிய மாற்றத்தை அறிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, எதிர்காலம் என்னவென்று தெரியாதநிலையிலுள்ள 12 ஆயிரம் பேருக்கும் நல்லதொரு முடிவினை வழங்கவேண்டுமென்ற கோரிக்கைகள் பல்வேறுதரப்பிலிருந்தும் வலுத்துவருகின்றன.
இதனை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் பல ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் இவ்வாரம் கன்பராவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்த அதேநேரம், எதிர்வரும் சனிக்கிழமை பெர்த்திலும் ஆர்ப்பாட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் TPV அல்லது SHEV விசாவில் வசிக்கும் 19,000 பேர், நிரந்தர விசா பெறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த மாதம் ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.
ஆனால் முன்னாள் கூட்டணி அரசின் "fast-track" என்று அழைக்கப்படும் நடைமுறையின்கீழ் பாதுகாப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சுமார் 12,000 பேர் தொடர்பில் எவ்வித தீர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த திங்களன்று கன்பரா நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர் ஹுசைன் அல் சதானி, fast-track ஊடான முழு செயல்முறையும் அநீதியானது எனக் கூறினார்.
சிலருக்கு அரை மணி நேர நேர்காணல் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், அரை மணி நேரத்திற்குள் ஒருவர் உண்மையான அகதியா என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்? எனவும் கேள்வியெழுப்பிய அவர், இந்த fast-track திட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

Iranian asylum seeker Ebrahim Asadolahzadeh says he handed out pamphlets for the Labor Party before the May election, but says 'I cannot handle any more of this'. Credit: SBS News / Sara Tomevska
"நாங்கள் நல்லவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு உதவுவோம்" என்று லேபர் கட்சி தமக்கு உறுதியளித்ததாகவும், கடந்த தேர்தலில் தான் அவர்களுக்காக துண்டு பிரசுரங்களை கூட வழங்கியதாகவும் அவர் கூறினார்.
10 ஆண்டுகளாக குடும்பத்தைப்பிரிந்து வாழ்ந்துகொண்டிருப்பதாகவும், இதற்கு மேலும் துன்பத்தை தாங்கிக்கொள்ள இயலாது எனவும் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

Some of the protesters outside Parliament House on Monday. Source: AAP / Lukas Coch
இவ்வாறு நிச்சயமற்ற நிலையிலுள்ளவர்களுக்கான தீர்வு தொடர்பில் கேட்டபோது, "பாதுகாப்பு விண்ணப்ப செயல்முறையின் பல்வேறு கட்டங்களில், உண்மையான அகதிகள் என அடையாளம் காணப்படுபவர்கள் இங்கு நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று நம்புகிறோம்." என குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்தார்.

Immigration minister Andrew Giles. Source: AAP / Mick Tsikas
இதன்படி, மறுஆய்வின் இறுதியில், ஆஸ்திரேலியாவில் புகலிடம் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் நிரந்தர விசா பெறுவார்கள் எனவும், மற்றவர்கள் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது எவ்வளவு விரைவாக நிகழலாம் என்பதற்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை.

Somali asylum seeker Maria Kahie has called for the government to 'have some compassion'. Credit: SBS News / Sara Tomevska
2016 இல் சமூக காவலில் விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் ஒரு ஆஸ்திரேலிய குடிமகனை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றுள்ளார். ஆனால் அவரது அகதி விண்ணப்பம் fast-track செயல்முறையின் கீழ் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர் இப்போது bridging விசாவில் இருக்கிறார்.
“Bridging விசாவில் என்னால் வேலை செய்ய முடியும், ஆனால் படிக்க முடியாது. வங்கியில் இருந்து கடன் பெற முடியாது, அதனால் எங்களால் வீடு வாங்க முடியாது” என்று Maria Kahie கூறினார்.
"நான் ஆஸ்திரேலியாவில் பத்து வருடங்களாக இருக்கிறேன். இப்போது அவர்கள் என்னை மூன்றாவது நாட்டிற்குச் செல்லத் தூண்டுகிறார்கள், ஆனால் என் குழந்தைகள் இங்கே இருக்கிறார்கள், என் குடும்பம் இங்கே இருக்கிறது, என் தொழில் இங்கே இருக்கிறது" எனச் சுட்டிக்காட்டிய அவர், லேபர் அரசு கருணை காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுஒருபுறமிருக்க fast-track திட்டத்தை ஒழிக்குமாறு லேபர் கட்சியை வலியுறுத்தியுள்ள Refugee Action Coalitionஐச் சேர்ந்த Ian Rintoul, இது நியாயமற்றது மற்றும் கடுமையானது என சுட்டிக்காட்டினார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.