ஆளும் லேபர் அரசு அதன் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியிருப்பதன் மூலம் நாட்டில் நிச்சயமற்ற நிலையில் தற்காலிக வீசாவில் வாழும் ஆயிரக்கணக்கான அகதிகள் நாட்டில் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
திங்கட்கிழமை முதல், தற்காலிக பாதுகாப்பு வீசாவில் (TPVகள்) அல்லது Safe Haven Enterprise வீசாக்களில் (SHEVs) உள்ள சுமார் 19,000 பேர் நிரந்தர வீசாக்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பை பெடரல் அரசு ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டது.
தற்காலிக வீசாவில் உள்ள பல்லாயிரம் அகதிகள் வேலை செய்து வரி செலுத்தி வரும் நிலையில் அவர்கள் நிச்சயமற்ற நிலையில் இருப்பதில் அர்த்தமில்லை என்று குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்தார்.
இந்த மாற்றம் 2013 இன் பிற்பகுதியில் Operation Sovereign Borders என்ற எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு வந்த அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும் அல்லது 14 பிப்ரவரி 2023க்கு முன் TPV அல்லது SHEV வீசா வைத்திருப்பவர்கள் அல்லது விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நிரந்தர விசா வழங்கப்பட்டவர்கள் Centrelink கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பிக்க முடியும், NDISஐ அணுகவும் மற்றும் உயர்கல்வி உதவிக்காகவும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறவும் அனுமதிக்கப்படுவார்கள் மேலும் தங்களின் குடும்ப உறுப்பினர்களை sponsor செய்து ஆஸ்திரேலியா அழைத்து வர முடியும்.
தற்காலிக வீசா ரத்து செய்யப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட சுமார் 2,500 பேர் நிரந்தர வீசாவிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; அவர்கள் தானாக முன்வந்து ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று பெடரல் அரசு தெரிவித்துள்ளது.
Operation Sovereign Borders என்ற எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையில் அரசு உறுதியுடன் இருப்பதாகவும் புகலிடம் தேடி படகுகள் கடலில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படும் என்று உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.
படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து நிரந்தர வீசாவில் உள்ள அகதிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இங்கு அழைத்து வர சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருந்த கட்டுப்பாட்டை ஏற்கனவே நீக்கி அறிவித்த பெடரல் அரசு தற்போது தற்காலிக வீசாவில் உள்ள அகதிகள் நிரந்தர வீசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்ற இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.