தமது துணைவர்களையும் தம்முடன் அழைத்துச்செல்வதற்கான அனுமதி வழங்கப்படாததையடுத்து, அமெரிக்காவில் குடியமர்வதற்கான வாய்ப்பினை சில அகதிகள் நிராகரித்துள்ளதாக The Guardian செய்திவெளியிட்டுள்ளது.
2016ம் ஆண்டு ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ், நவுறு அல்லது மனுஸ் தடுப்புமுகாம்களில் உள்ளவர்களில் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்ட சுமார் 1250 பேரை அமெரிக்காவில் குடியமர்த்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு குடியமர்த்தப்படுபவர்களின் குடும்ப அங்கத்தினர்களும் அவர்களோடு வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அமெரிக்கா உறுதியளித்திருக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவில் குடியமர்வதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாகவும், ஆனால் தனது துணைவரையும் அழைத்துச்செல்வதற்கு அமெரிக்கா மறுத்துள்ளதையடுத்து, தான் அங்கு குடியமர்வதற்கான சந்தர்ப்பத்தை நிராகரித்துள்ளதாகவும் லாரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தெரிவித்துள்ளார்.
லாராவும் அவருடைய துணைவரும், நவுறுவில் வெவ்வேறாக தாக்கல்செய்த புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களின் அடிப்படையில், இவர்கள் இருவரும் அகதிகள் என ஆஸ்திரேலியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தனர்.
ஆனால் அமெரிக்காவில் குடியர்வதற்கான வாய்ப்பு லாராவுக்கு மட்டும் கிடைத்துள்ள பின்னணியில், லாராவுடன் அவரது துணைவர் அமெரிக்கா செல்லமுடியாது எனவும், இதன்காரணமாக தான் அந்த வாய்ப்பினை நிராகரிக்கவேண்டியுள்ளதாகவும் லாரா தெரிவித்துள்ளார்.
லாராவும் அவரது துணைவரும் மருத்துவதேவைக்காக ஆஸ்திரேலிய அழைத்துவரப்பட்டு இங்கு வெவ்வேறு விசாக்களில் தங்கியுள்ளனர்.
லாராவின் நிலையில் இன்னும் சிலர் உள்ளதாகவும், அவர்களும் தமது குடும்பங்களை அமெரிக்கா அழைத்துச்செல்ல முடியாது என்பதால் அங்கு குடியமர்த்தப்படும் வாய்ப்பினை நிராகரிக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் The Guardian செய்தி மேலும் கூறுகின்றது.
இதேவேளை அமெரிக்காவில் குடியமர்த்தப்படும் ஆஸ்திரேலிய அகதியொருவர் தனது குடும்பத்தை அங்கு வரவழைப்பதற்கு மிக நீண்ட நாட்கள் எடுக்கும் என்பதால், அமெரிக்காவில் குடியமர்த்தப்படும் வாய்ப்பை ஏற்றுக்கொள்வது சில குடும்பங்களின் நிரந்தர பிரிவிற்கு காரணமாகிவிடும் என மனித உரிமைகள் சட்ட மையத்தின் Josephine Langbien தெரிவித்துள்ளார்.
பல இன்னல்களை அனுபவித்த அகதிகள், மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்தப்படும் வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்தமுடியாத நிலையில் இருப்பது மிகவும் கவலைக்குரியதென குறிப்பிட்டுள்ள Josephine Langbien, ஆஸ்திரேலியாவின் கடுமையான அகதிகள் கொள்கையின் விளைவுகளில் இதுவும் ஒன்று என்றார்.
ஆனால் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவதற்கு தெரிவுசெய்யப்பட்டவருடன், அவருடைய குடும்பத்தை அனுமதிப்பதா இல்லையா என்பது அமெரிக்காவைப்பொறுத்தது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.