Key Points
- இந்திய மாணவர்களின் விசா விண்ணப்ப மோசடி தொடர்பில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
- ஆஸ்திரேலியாவின் குடியேற்ற முறையின் நம்பகத்தன்மை குறித்து அரசும் உயர் கல்வித் துறையும் அக்கறை கொண்டுள்ளன.
- கோவிட் தொற்றுக்குப் பிறகு எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து இந்திய மாணவர்களிடமிருந்து வந்த விண்ணப்பங்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக அதிகரித்திருந்தன.
மோசடி விசா விண்ணப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், சில இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் குடியேற்ற முறைமையின் நம்பகத்தன்மை ஆபத்தில் இருப்பதாக அரசும் உயர்கல்வித் துறையினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வேலை செய்வதற்கான எளிதான பாதையாக மாணவர் விசா நடைமுறையை பலர் தவறாக பயன்படுத்த முயற்சிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு சர்வதேச மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, விண்ணப்பங்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக அதிகரித்து வந்துள்ளன.
பிரதமர் Anthony Albanese மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் பரந்த அளவிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து, இந்திய மாணவர்களின் வருடாந்திர விண்ணப்பங்கள், தொற்றுநோய்க்கு முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையான 75,000 ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப்பின்னணியில் நடத்திய விசாரணையின்படி, ஐந்து பல்கலைக்கழகங்கள் - விக்டோரியா பல்கலைக்கழகம், Edith Cowan பல்கலைக்கழகம், University of Wollongong, Torrens பல்கலைக்கழகம், மற்றும் Southern Cross பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கல்வி முகவர்கள் - இந்தியாவின் சில மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தடை விதித்துள்ளன.
உள்துறை அமைச்சு, இந்தியாவிலிருந்து வரும் மாணவர் விசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் போக்கு அதிகரித்து வருவதன் காரணமாக, தமது நற்பெயர் மற்றும் தரவரிசை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, விசா நிராகரிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களிலிருந்து வரும் விண்ணப்பங்களுக்கு குறித்த பல்கலைக்கழகங்கள் தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் கோவிட் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து, முழுமையற்ற விண்ணப்பங்கள் மற்றும் மோசடியான தகவல் மற்றும் ஆவணங்களைக் கொண்ட மாணவர் விசா விண்ணப்பங்கள் பல கிடைக்கப்பெற்றதாக, உள்துறை அமைச்சு குறித்த நாளிதழ்களிடம் தெரிவித்துள்ளது.
மாணவர் விசா வைத்திருப்பவர்கள், வாரத்திற்கு அதிகபட்சமாக 20 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற வரம்புகளை ஆஸ்திரேலிய அரசு நீக்கிய பிறகு, தெற்காசிய நாடுகளில் இருந்து வந்த விண்ணப்பங்கள் கணிசமாக அதிகரித்தன.
பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவின் தொழிற்கல்வி துறையில் படிப்பதற்காக இந்தியாவில் இருந்து தாக்கல்செய்யப்பட்ட 94 சதவீத விண்ணப்பங்களை உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.
இதேவேளை இந்தியாவிலுள்ள சில கல்வி முகவர்கள், பணம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு ஆட்களைத் திரட்டுவதன்மூலம், ஆஸ்திரேலிய குடிவரவு முறைமையினை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என குற்றம்சாட்டப்படுகிறது.
மார்ச் மாதம், கனடாவின் எல்லைப் பாதுகாப்புத்துறை, போலியான கல்லூரி சேர்க்கை கடிதத்துடன் நாட்டிற்குள் நுழைந்ததற்காக குற்றம்சாட்டப்பட்ட 150க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை, அங்கிருந்து வெளியேற்றியது.
அதேநேரம் இந்தியாவில் உள்ள குடியேற்ற ஆலோசனை நிறுவனம் தங்களுக்கு போலியான ஆவணங்களை வழங்கியதால் தாம் ஏமாற்றப்பட்டதாக மாணவர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச கல்வி தொடர்பான ஆஸ்திரேலிய நாடாளுமன்ற குழு, செவ்வாய்க்கிழமை முதல் விசாரணையை நடத்துகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.