ஆஸ்திரேலியாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள்

closeup of australian visa in passport

closeup of australian visa in passport Source: SBS

கொரோனா பரவல் காரணமாக சுமார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் மாணவர் வருகை தடைப்பட்டிருந்த பின்னணியில் டிசம்பர் 2021 இல் சர்வதேச மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா அதன் கதவுகளை மீண்டும் திறந்தது.அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு சர்வதேச மாணவர்கள் திரும்புவதற்கு வசதியாக சில தளர்வுகளையும் அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் மெல்பனில் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருமதி மரியம் அவர்கள் வழங்கியுள்ள தகவல்களை மேலுள்ள ஒலிக்கீற்றில் செவிமடுக்கலாம்.


ஆஸ்திரேலிய அரசு சர்வதேச மாணவர்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளின்கீழ், ஜனவரி 19 முதல் மார்ச் 19 வரையான காலப்பகுதிக்குள், ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் சர்வதேச மாணவர்களின் விசா விண்ணப்பக் கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது.

தகுதிபெறும் மாணவர்கள் விசா விண்ணப்ப கட்டணத்தை மீளப்பெறுவதற்கு டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்க முடியும்.

அதேபோன்று மாணவர் விசாவுடன் இங்கு வருபவர்கள் வேலைசெய்ய வேண்டுமெனில், தமது கற்கைநெறி ஆரம்பமாகும்வரை காத்திருக்க வேண்டியிருந்த பின்னணியில்,  இதிலும் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி மாணவர் விசாவுடன் இங்கு வருபவர், தனக்கான கற்கை நெறி ஆரம்பமாவதற்கு முன்னரேயே அவர் வேலைசெய்ய ஆரம்பிக்கலாம்.  
International students in Australia
Source: AAP
மேலும் மாணவர் விசாவிலுள்ளவர் எத்தனை மணிநேரங்கள் வேலைசெய்யலாம் என்ற கட்டுப்பாட்டையும் ஆஸ்திரேலிய அரசு நீக்கியுள்ளது.

இதேவேளை கொரோனா பரவலையடுத்து கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச மாணவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால், அரசு அறிவித்துள்ள சலுகைகளுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்களும் தமது கட்டணங்களைக் குறைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் எனவும், மேலும் பல நாடுகளிலிருந்து மாணவர்கள் இங்கு வருவார்கள் எனவும் வெளிநாட்டு மாணவர்கள் சிலர் SBS தமிழிடம் தெரிவித்தனர்.

அதேபோன்று புலமைப்பரிசில்களை வழங்குவதும் மாணவர்களை தொடர்ந்தும் இங்கு கல்விகற்கத் தூண்டும் எனவும் அம்மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
International students
Source: Getty Images
ஆஸ்திரேலியாவிற்கான Temporary Graduate (subclass 485) விசாக்களை வைத்திருந்த பலர் எல்லைக்கட்டுப்பாடு காரணமாக இங்கு வரமுடியாத நிலை காணப்பட்ட பின்னணியில், இவர்களது விசா கடந்த 2020 பெப்ரவரி மாதம் 1ம் திகதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ காலாவதியாகியிருந்தால், அவர்கள் மீண்டும் subclass 485 விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

அவர்களது முன்னைய விசா எந்தளவு காலப்பகுதிக்கு வழங்கப்பட்டிருந்ததோ, அதேயளவு காலப்பகுதிக்கு இவ்விசாவை மீண்டும் பெறமுடியும்.

முன்னதாக subclass 485 விசாவுக்கு விண்ணப்பித்த ஒருவர் மீண்டும் அதே விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாதிருந்த பின்னணியில், அரசு இந்த சலுகையை வழங்குகின்றது.

Temporary Graduate subclass 485 விசா வைத்திருந்த சுமார் 30 ஆயிரம் பேர், ஆஸ்திரேலியா திரும்பமுடியாமல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இவர்கள்  புதிய மாற்றீட்டு விசாவுக்கு 1 ஜுலை 2022 முதல் விண்ணப்பிக்க முடியும்.
students visa
Australia welcomes increasing return of international students Source: Getty Images
இதுஒருபுறமிருக்க ஜுலை 6ம் திகதி முதல், சர்வதேச மாணவர்கள் உட்பட ஆஸ்திரேலியா வரும்  பயணிகள், கோவிட் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா இல்லையா என்ற தகவலை வழங்கவேண்டிய அவசியமில்லை.

மேலும் தங்களுடைய தொடர்பு விவரங்கள் மற்றும் கடந்த 14 நாட்களில் எங்கு இருந்தார்கள் என்ற தகவல்களையும் வழங்க வேண்டியதில்லை.

அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் பயணிகள் பிரகடனத்தின் (DPD) கீழ், தனிமைப்படுத்தல் மற்றும் சோதனை நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டிய அவசியமுமில்லை.

இருப்பினும், பயணிகள் விமான நிறுவனங்கள், பிற நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் நடைமுறைப்படுத்தப்படும் கோவிட் தொடர்பிலான கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர் விசாவிலுள்ளவர்களுக்கான சலுகைகள் குறித்த மேலதிக விவரங்களுக்கு உள்துறை அமைச்சின் இணையத்தளமான க்குச் செல்லவும்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share