ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட அகதிகளை, நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் அண்மையில் இருநாடுகளுக்கிடையில் எட்டப்பட்டது.
இதன்படி வருடமொன்றுக்கு 150 அகதிகள் என்ற அடிப்படையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 அகதிகள் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படவுள்ளனர்.
தற்போது நவுறுவிலுள்ள அகதிகள், மற்றும் கடல்கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு இங்கு தற்காலிக விசாவுடன் தங்கியுள்ள அகதிகள், இந்த ஒப்பந்தத்தின்கீழ் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதற்கு தகுதிபெறுவர்.
இவ்வாறு நியூசிலாந்தில் குடியமர்த்தப்படும் அகதிகள், அந்நாட்டு குடியுரிமை பெற்றுக்கொண்ட பின்னர், ஆஸ்திரேலியாவிற்கு வரமுடியாதபடி நிரந்தர தடை விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின்கீழ் நியூசிலாந்து செல்லும் அகதிகள், backdoor-பின்வாசல் வழியாக மீண்டும் ஆஸ்திரேலியா வருவதற்கான வாய்ப்பு மறுக்கப்படும் என, உள்துறை அமைச்சர் Karen Andrews அவர்கள் Radio National-க்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இத்தடையைக் கொண்டுவருவதற்கு சட்டமாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள பின்னணியில், இத்தகையதொரு தடையை அரசு எவ்வாறு கொண்டுவரமுடியுமென அரசியல் அவதானிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஆனால் எதிர்கட்சியின் ஆதரவுடன் சட்டமாற்றத்தைக் கொண்டுவந்து இதனைச் சாத்தியமாக்க முடியுமென குறிப்பிடப்படுகிறது.
கடல்கடந்த தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை வருடமொன்றுக்கு ஏற்றுக்கொள்ளத் தயார் என கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து அரசு அறிவித்திருந்த நிலையில், இதுகுறித்த இறுதி ஒப்பந்தம் சுமார் 9 ஆண்டுகளின்பின், கடந்த மாதம் இருநாடுகளுக்கிடையில் எட்டப்பட்டது.
நியூசிலாந்தின் சலுகையை ஏற்றுக்கொண்டால் அது ஆட்கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் எனவும், ஆஸ்திரேலியா வருவதற்கான பின்வாசலாக நியூசிலாந்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் எனவும் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு, இதனை ஏற்றுக்கொள்வதற்கு இதுவரை காலமும் மறுத்துவந்தமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.